Saturday, March 3, 2012

"சென்செக்ஸ்" 53 புள்ளிகள் அதிகரிப்பு



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.குறிப்பாக, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்ற செய்தியால், அந்நாட்டிலும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின், நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, இந்நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் வழங்கியதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, ஆரோக்ய பராமரிப்பு, பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 52.83 புள்ளிகள் அதிகரித்து, 17,636.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,731.88 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,504.38 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 19.60 புள்ளிகள் உயர்ந்து, 5,359.35 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,392.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,315.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.