பங்கு வர்த்தகத்தின் வகைகள்


பங்குச் சந்தையில் ஈடுபடுவோரை, இரு வகையாகப்பிரிக்கலாம். அவையாவன:
                           அ) பங்கு வர்த்தகர்கள்கள்
                          ஆ) பங்கு முதலீட்டாளர்கள்

                           பங்குகளை வாங்கும் யாராயிருந்தாலும் அவர்கள் அடிப்படையில் பங்கு வர்த்தகர்கள்தான் என்றாலும், அவர்கள் அப்பங்குகளை வைத்திருக்கும் கால அளவுகள், நோக்கங்கள் இவற்றின் அடிப்படையில், பங்கு வணிகர்கள் என்றும், பங்கு முதலீட்டாளர்கள் என்றும் நாம் கூறலாம்.
முதலீட்டாளர்களை குறுகிய கால முதலீட்டாளர்கள், நீண்ட கால முதலீட்டாளர்கள் என மீண்டும் இரண்டாகப் பகுக்கலாம். விலை சரியும்பொழுது/பங்குச்சந்தை கரடிப்போக்கில் இருக்கும்பொழுது பங்குகளை வாங்கி, தாம் எதிபார்க்கும் அளவுக்குப் பங்குகளுடைய விலை ஏறியவுடன் விற்று லாபத்தைப் பதிவு செய்துவிடுவது(Profit Booking), குறுகிய கால முதலீட்டாளர்களின் நோக்கம். இவர்களது முதலீடு பொதுவாக, ஒரு குறிப்பிட்ட பங்கில் (Stock/Share)ஒரு மாதம் முதல் ஆறு மாதம் வரையே இருக்கும்.இவர்கள் எத்தகைய பங்கு அதிகமாக வர்த்தகம் ஆகுமோ, எது அதிக ஊசலாட்டத்தை உடையதோ, அத்தகைய பங்கில் அதிக ஆர்வம் காட்டுவர்.ஒரு நிறுவனத்தில் ஏற்படக்கூடிய மாறுதல்கள், காலாண்டு/ஆண்டு அறிக்கைகளால், பங்குகளின் விலையில் ஏற்படக்கூடிய உயர்வு,நாட்டில் நிதித்துறையில் வரக்கூடிய மாறுதல்கள் இவற்றை மனதில் கொண்டு குறுகிய காலமுதலீடுகள் செய்யப்படலாம்.

                                   ஆனால், நீண்ட கால முதலீட்டாளர்கள், பங்காதாயத்தை விரும்புபவர்கள். இவர்கள், மிகத் தரமான நிறுவனத்தின் பங்குகளிலேயே முதலீடு செய்வார்கள். ஒரு நீண்ட காலத் திட்டத்திற்காகவோ அல்லது வரியைத் தவிர்ப்பதற்காகவோ இவர்கள் முதலீடு செய்யலாம்.இவர்கள் ஒரு நிறுவனத்தின் நிலையை, அதன் தன்மையை அடிப்படை ஆய்வு செய்து (Fundamental Analysis) அதன் பின்னரே முதலீடு செய்வர். பொதுவாக இவர்கள் சந்தையின் ஊசலாட்டத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் நோக்குடன் முதலீடு செய்வதில்லை. வருடாவருடம் கிடைக்கும் பங்காதாயம் (Dividend), குறிப்பிட்ட காலத்துக்குப் பின் ஏறியிருக்கக் கூடிய பங்குகளின் விலையால் ஏற்படும் லாபம் இவற்றை மனதில் கொண்டே, பொதுவாக நீண்ட கால முதலீடுகள் செய்யப்படுகின்றன.

                           பங்கு வர்த்தகர்கள், பொதுவாக ஒரு நாளின்போது, சந்தையில் ஏற்படும் மாறுபாட்டினைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள். ஒரே நாளில் பலமுறை, பங்குகளை வாங்கியும் விற்பனை செய்தும் வணிகம் செய்வதை 'நாள் வணிகம்' (Day Trading) என்பர். இவர்கள் பங்குகளின் விலை ஏறுமா, சரியுமா என்பதை நுணுக்க ஆய்வு (Technical Analysis) செய்து அதன் அடிப்படையில் வர்த்தகம் செய்கின்றனர். இன்ன காரணங்களால், இந்தவகைப் பங்குகளில் விலை ஏறும் வாய்ப்புண்டு எனக் கணித்து, சிலர் பங்குகளை வாங்கி மிகக் குறுகிய காலத்தில் ( நான்கு ஐந்து நாட்களில்) விற்று லாபம் பார்ப்பர். இத்தகைய வர்த்தகர்களை உந்து / திணிவுப்பங்கு (Momuntum Shares) வர்த்தகர்கள் என அழைப்பதுண்டு. (எ.கா- இந்த நிறுவனம் ஒரு புதிய திட்டப்பணியில் (Project) ஈடுபடவுள்ளது எனவோ, ஒரு பெரிய நிறுவனத்திடம் கூட்டு வாணிபம் செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது எனவோ (Tie-up), பிற சிறிய நிறுவனங்களை வாங்கி, வணிகத்தை விரிவு படுத்தப் போகிறது என்றோ, (Take Over), குறைந்த பட்சமாக, மிகுந்த லாபமீட்டியுள்ளது, நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும்பொழுது பங்குகளின் விலையும் உயரும் என்று கணித்தோ ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவர். அச்செய்தி வெளிவந்தவுடன், அவர்கள் எதிர்பார்ப்பின்படி விலை உயரும். தம்மிடம் உள்ள பங்குகளை அதிக விலைக்கு விற்று Profit Booking செய்துவிடுவர்.

                                     இவை எல்லாமே 'வாங்கு-விற்பனை செய்' என்ற அடிப்படையில் இயங்குவன. அதாவது குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்தல் என்ற விதியின் படி இயங்குவன ( Buy Low; Sell High). இது Long Trading என வழங்கப்படுகிறது.

                              இதற்கு எதிரான தத்துவம் 'முதலில் விற்பனை, பிறகு வாங்குதல்' ஆகும். முதலில் அதிக விலையில் விற்பனை செய்துவிட்டு பின், விலை சரிந்தவுடன் விற்ற அளவுக்கான பங்குகளை வாங்கி சமன்படுத்தல் (Adjust) Short Trading எனப்படும். அதாவது (Sell High; Buy Low)
என்ற கொள்கை செயல்படுத்தப்படுகிறது. அனேகமாக, பங்குச்சந்தையானது சரியும் என எதிர்பார்க்கப்படும்பொழுது, (கரடிச் சந்தைப் போக்கின் பொழுது) பங்குகளை முதலில் அதிக விலைக்கு விற்றுவிட்டு (கையில் இல்லாத பங்குகளை), விலை சரிந்தவுடன் அன்றைய தினத்துக்குள்ளேயே குறைந்த விலைக்கு வாங்குவதையே Short Trading / Short selling என்று அழைக்கிறோம்.


                    பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து லாபம் காண்பது அத்தனை எளிதானது அல்ல. எந்தப்பங்குகளை வாங்கவேண்டும்? எப்பொழுது வாங்கவேண்டும்? எப்பொழுது விற்கவேண்டும் என்பதைச் சரிவர அறியாமல், கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்வது சூதாட்டத்தில் ஈடுபடுவதைப் போன்றதுதான். நிறுவனத்தின் நிலைமை, அதன் பொருளாதார திடத்தன்மை (Financial Stability), நாட்டின் நிலை, சந்தையின் தன்மை முதலிய பலவற்றைப் பற்றியும் அறிந்துதான் பங்கு வணிகத்தில் ஈடுபடவேண்டும். அப்படி இருந்துமே, சில சமயம் நட்டமடைய நேரிடலாம். எனினும், சந்தை குறித்த கூரிய அறிவும், அதன் போக்கினை ஊகிக்கும் திறனும், வேகமாக முடிவெடுத்து (முதலீடு செய்வதா, விற்றுவிட்டு வெளியில் வந்து விடுவதா ) செயலாற்றும் ஆற்றலும் உள்ளவர்கள் பொதுவாக எத்தகைய சந்தையிலும் எதிர்நீச்சல் போட்டுவிடுவார்கள். ஆனால் பெரும்பான்மையான மக்கள் சந்தையின் சுழற்சியில் சிக்குண்டு தவிப்பவர்களே. பலரது நட்டமே, ஒருவரது லாபமாக மாறுகிறது. இதுவே பங்குச்சந்தையின் தத்துவம். பங்குச் சந்தையில் பொதுவாக வெற்றி-தோல்வி(Win-Lose),தோல்வி-வெற்றி (Lose-Win) இவற்றுக்கான வாய்ப்புண்டே தவிர, வெற்றி-வெற்றி (Win-Win) என்ற சூழலுக்கான வாய்ப்பு இல்லை.

               மேற்கூறியவை எல்லாம் பங்குச் சந்தையில் ஈடுபட விரும்புபவரை பயமுறுத்துவதற்காக அன்று. 'ஆழமறியாமல் காலை விடாதே' என்ற பழமொழியை நினைவு படுத்தத்தான். எனவே பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபடுமுன், அது குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.