பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?


                            பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே. பங்குச்சந்தையில், குறிப்பாக நாள் வணிகத்தில் புதிதாக ஈடுபடுபவர்கள் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று இந்தப் பகுதியில் பார்த்தோம்.
                 நாள் வணிகம் மிக எளிமையானதாகவும் அதிக லாபகரமானதாகவும் தோற்றமளிக்கலாம். ஆனால், எதிரி நாட்டில் உளவு அறியச் சென்றிருக்கும் இராணுவ வீரன் போல் நாம் ஒவ்வொரு கணமும் தயார் நிலையில் இருப்பது அவசியம். நாள் வணிகத்தின்பொழுது பின்பற்ற வேண்டிய சில விதிகள் குறித்தும், நாள் வணிகத்தில் ஆதாயமடைவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்தும் சில கருத்துகளை இக்கட்டுரையில் காணலாம்.

                 தொலைக்காட்சியில் / அல்லது செய்தித்தாளில் கொடுக்கப்படும் கணிப்புகளை அப்படியே நம்பவேண்டாம். இவ்வாறு கூறப்படும் பங்குகளில் அதிகப்பேர் ஆர்வம் காட்டுவதால் விலை கன்னாபின்னாவென்று அதிகரிக்கும். இத்தகைய போக்கு நீடிக்கும் என நம்ப இயலாது. நீங்களே, சரியான பங்குகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அதே போல் பிறர் வாங்குவதைப் பார்த்து வாங்கக் கூடாது என்பதை ஏற்கனவே கண்டோம்.

                         ஆர்வமிகுதியால் ஏராளமான பணத்தை ஒரே பங்கில் போடவேண்டாம். எவ்வளவுதான் மிகச் சிறந்த நிறுவனத்தின் பங்காக இருப்பினும் 10 சதவீதத்திற்கு மேல் ஒரே பங்கில் போடுவது அபாயமானது. சொல்லப்போனால் சரியான அளவு 5 சதவீதம்தான். மேலும் ஒரு பங்கின் விலை சரிந்திருக்கும் பொழுது வாங்குவது சிலரது வழக்கம். மீண்டும் ஏறும் பொழுது ஆதாயம் கிடைக்கும். இந்தத் திட்டம் சரியானதுதான். ஆனால் ஒரு பங்கின் விலை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டதானால், அதை வாங்குவதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காதீர்கள். இவ்விதி, உச்சாணிக்கொம்பு வரை விலை ஏறிவிட்ட பங்கிற்கும் பொருந்தும்.

                          உங்கள் கைப்பணத்தைப் போட்டு பங்கு விற்பனையில் ஈடுபடுமுன், கற்பனையாக நீங்கள் வாங்கி, விற்று பயிற்சி செய்யுங்கள். அதில் லாபம் பெற முடிகிறதா? உங்கள் யூகங்கள் பலிக்கின்றனவா என்பதை சோதனை செய்து அறிந்துகொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தேறிய பின், கைப்பணத்தை முதலீடு செய்யலாம். அனுபவமின்றி நேரடியாகப் பணத்தைப் போட்டுவிட்டு பின் விழிப்பதைவிட இது நல்லது.

             முக்கியமாக லாபம் தரக்கூடிய துறைகள் எவை என்றும் நல்ல நிறுவனங்கள் என்னென்னவென்றும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். தகவல் தொழில் நுட்பம், வங்கிகள் முதலியவை நல்ல துறைகள். இது குறித்துத் தெரிந்துகொள்ள நீங்கள் பல்வேறு நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் முதலியவற்றைப் பார்ப்பது நல்லது. ஆனால் அவை கூறும் ஆலோசனைகள் எல்லாவற்றையும் அப்படியே நம்பிவிடவேண்டாம். உங்கள் சிந்தனைத்திறனையும் தர்க்க அறிவையும் பயன்படுத்தி எப்பங்குகளில் ஈடுபடலாம் என நீங்களே முடிவு செய்யவும்.

             பங்குச்சந்தை விளையாட்டு மிகுந்த கவனத்துடன் ஆடப்படவேண்டிய ஒன்று. விழிப்புடன் இருப்பதும் முடிவுகளை உடனடியாகச் செய்வதும் அவசியம். நாள் வணிகத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து சந்தையைக் கண்காணித்து வரவேண்டும். வீட்டில் இருந்தவாறே கணிணியில் வணிகம் செய்பவராக இருப்பின், மின் தடை, கணிணிக் கோளாறுகள் இவை காரணமாக இடையூறு நேராதவாறு பராமரிப்பதும், UPS போன்றவற்றை வைத்திருப்பதும் அவசியம்.

               ஒரு விற்பனையைச் செய்து முடிக்குமுன் மனக்கோட்டை கட்டாதீர்கள். இது உங்கள் கவனத்தைச் சிதறச் செய்வதோடு, விற்பனை எதிர்பார்த்த பலனை அளிக்காவிடில் மனச்சோர்வையும் உருவாக்கும். நேற்று சந்தை இருந்தது போல் இன்றும், இன்று இருப்பது போல் நாளையும் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்திற்கும், புதுப்புது உத்திகளைக் கையாள்வதற்கும் தயார் நிலையில் இருங்கள். ஒவ்வொரு நாள் பங்குச் சந்தை மேலும் கீழும் அதிகம் ஊசலாடும். பங்கின் விலைகள் அடிக்கடி ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும். பரபரப்பு மிகுதியாக இருக்கும். மற்றொரு நாளிலோ சந்தை மிக மந்தமாக இருக்கும்.

      ஒவ்வொரு பங்கிற்கும் 'Stop Loss' என்று ஒன்று உண்டு. அதை மறக்காமல் இருங்கள். விலை சரிகையில் அது அடி வரை சென்று விழும் வரை காத்திருக்காதீர்கள். Stop Loss கோட்டை அது தொடுகையில் விற்றுவிடுங்கள். சந்தையின் போக்கினைக்கண்டு பீதி அடையாமல் இருப்பதும் மிக முக்கியம்.

           பங்குச்சந்தையில் ஈடுபட, மனத்திண்மையும் கட்டுப்பாடும்கூட அவசியம். இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பதுதான் சந்தையின் வழக்கம் எனினும், அதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். 'பேராசை பெரு நட்டம்' என்பது பங்குச்சந்தைக்கும் பொருந்தக் கூடியதே.

மறக்கக் கூடாத சில குறிப்புகள்:
  • எல்லோரும் வாங்கும் பொழுது விற்பனை செய்யவும் எல்லாரும் விற்கும்பொழுது வாங்கவும் கற்றுக்கொள்ளுங்கள். இது படிக்கும்பொழுது எளிதாகத் தோன்றலாம். ஆனால் செயல் படுத்துவது கடினம். சந்தையில் எதிர்நீச்சல் அடிக்க இக்கொள்கை உதவும். எல்லோரும் ஒரு பங்கில் ஆர்வம் செலுத்தி வாங்குகையில் அப்பங்கின் விலை அதிகரிக்கும். அப்பொழுது உங்கள் கையில் அப்பங்குகள் இருப்பின் விற்றுவிடுங்கள். அதே போல், பங்குச்சந்தை கரடிப்போக்கில் இருக்கையில் மக்கள் பீதியடைந்து விற்பார்கள். உண்மையில் அப்பங்குகள் நல்ல பங்குகளாக இருக்கலாம். ஆனால் கரடிப்போக்கின் பொழுது குறைந்த விலையில் பங்குகள் கிடைக்கும். அப்பொழுது வாங்கிப் போடுங்கள். லாபம் பெறும் வழி இதுவே.
  • Penny Stocks எனப்படும், முன்பின் தெரியாத் சிறிய நிறுவனங்களின் பங்குகளில் ( Z Category) முதலீடு செய்யாதீர்கள். மேலும் ஒரு பங்கின் பழைய வரலாற்றை, பழைய செயல்பாட்டை நம்பி அதை வாங்காதீர்கள். அதன் எதிர்காலத்தைக் குறித்த கணிப்புகளின் அடிப்படையிலேயே பங்குகளில் முதலீடு செய்யப்பட வேண்டும்.