பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள்.


பங்குச் சந்தை நிலையில்லாமல் மேலும் கீழும் ஊசலாடும் தன்மையுடையது. சொல்லப் போனால், அந்த ஊசலாட்டமே சந்தையின் உயிர்த்துடிப்பு. அது இல்லாமல் போனால் என்ன பரபரப்பு (Thriill)     இருக்கமுடியும்? இந்த ஏற்ற இறக்கங்களே பங்குச்சந்தையின் மிக முக்கியப் பண்பாகும். இந்த ஏற்ற இறக்கங்கள் எதன் அடிப்படையில் உருவாகின்றன தெரியுமா?
  1. நாட்டில் நிலவும் அரசியல் / பொருளாதாரச் சூழ்நிலைகள் (நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுதல், வரவு செலவுத்திட்டம்  (Budget)
  2. மத்திய வங்கி/நிதி அமைச்சகம் கொண்டுவரும் சில நெறிமுறைகள்/கட்டுப்பாடுகள் அல்லது சில விதிமுறைகள் விலக்கப் படுதல் (தொழிற்கொள்கை குறித்த அறிவிப்புகள், வெளிநாட்டு முதலீட்டுக்கான சட்ட திட்ட வரவுகள் முதலியன)
  3. உலகச் சந்தையில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் மாற்றங்கள் (அமெரிக்க வங்கிகளின் மோசமான நிலைமை, உலகப் பொருளாதாரத் தொய்வு)
  4. நிறுவனங்களின் காலாண்டு/ஆண்டு அறிக்கைகள் வெளியிடப் படுதல் அல்லது அந்நிறுவனங்கள் குறித்த சில தகவல்கள் (லேமன் நிறுவனம், சத்யம் நிறுவனம் )
  5. சில சமயம் எதிர்பாராத, பொய்யான வதந்திகள் கூட பங்குச் சந்தை நிலவரத்தை பாதிக்கின்றன.(யூக வியாபாரம் செய்பவரில் சிலர், இத்தகைய தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்பி லாபம் காண முயல்வதாகவும் சில சமயங்களில் குற்றச்சாட்டு எழுகிறது)

                 எது எப்படியோ, 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்பது போல, திறமையான, அறிவுக் கூர்மையும், சமயத்துக்குத் தக்கபடி செயல்படும் வேகமும் உள்ள முதலீட்டாளர்கள், எத்தகைய ஊசலாட்டத்திலும், லாபம் சம்பாதித்து விடுவர். குறைந்த பட்சம், நட்டமடையாமல் தப்பித்துக் கொள்வர். அது இல்லாதவர்கள் கதிதான் திண்டாட்டமாகிவிடுகிறது. ஆனால், சந்தை மிக அதிகமாக ஊசலாடிக்கொண்டே இருக்குமானால், சராசரி முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் அதில் ஈடுபட மாட்டார்கள் என்பது ஒரு குறை.

காளையும் கரடியும்.

                    பங்குச் சந்தையில் பங்குகளின் விலை ஏறுமுகமாக இருப்பின் அதைக் காளைச் சந்தை (Bull Market)எனவும், வீழ்ச்சியடையும்பொழுது கரடிச் சந்தை(Bear Market) எனவும் கூறுவது வழக்கம். ஏன் தெரியுமா? காளை வேகமாகத்தாக்கக் கூடியது என்றும் கரடி மந்தமானது என்றும் கருதப் படுகிறது. எனவே, பங்கு விற்பனை சூடு பிடித்து, விலைகள் ஏறுகையில் அது காளைச் சந்தை எனவும், பங்குகளின் விலைகள் சரிந்து, விற்பனை மந்தமாகும்பொழுது அது கரடிச் சந்தை எனவும் அழைக்கப் படுகிறது.

                 சிலர் "Bulle speculative" என்ற ஃபிரஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியது எனவும், லண்டனில் கரடித்தோல்களை விற்பவர்கள், கரடிகளைப் பிடிப்பதற்கு முன்பே அதற்கு விலை பேசிவிடுவது வழக்கம் என்பதால், short sellingஐக் குறிக்க கரடிச் சந்தை என்ற சொல் பயன்படுத்தப் பட்டது எனவும், பொதுவாக சந்தை சரியும்பொழுதுதான் Short Selling செய்வது வழக்கம் என்பதால், சந்தையின் வீழ்ச்சியடையும்பொழுது அது கரடிச் சந்தை என வழங்கப்படுகிறது எனவும் கருதுகின்றனர்.
பொதுவாக, பணவீக்கம் குறைவாகவும், நாட்டின் பொருளாதாரம் சீராகவும், உற்பத்தி உயர்ந்தும் இருக்கும்பொழுது காளைச் சந்தைப் போக்கு நிலவுகிறது. இதற்கு நேரெதிரானது கரடிப் போக்கு. இப்போக்கு நிலவுகையில் நாட்டில் வேலையின்மையும், பணவீக்கமும் காணப் படுகிறது.

வரலாற்று நிகழ்வுகள்:

                             ஏப்ரல் 2003 முதல், ஜனவரி 2009 வரையுள்ள காலத்தில் மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து காளைச் சந்தைப் போக்கு நிலவியது. இந்த ஐந்து ஆண்டு காலத்தில், சென்செக்ஸ் புள்ளிகள் 2900த்தில் இருந்து 21000 வரை உயர்ந்தது. அதே போல், மிக மோசமான கரடிச் சந்தைப் போக்கு 1929ம் வருடம், வால் ஸ்ட்ரீட் சந்தையின் வீழ்ச்சியாகும். இந்நிகழ்வின்பொழுது சந்தையில் பங்குகளின் விலை 89% குறைந்தது.

                          கரடிச் சந்தையில் பங்குகளை வாங்கி, காளைச் சந்தையில் விற்பதே புத்திசாலித்தனம். ஆனால், பெரும்பாலானவர்கள், சந்தை உயரும்பொழுது ஆர்வத்துடன் பங்குகளை வாங்குவர். சந்தை சரிவில் இருக்கும்பொழுது, பயந்துபோய் விற்றுவிடுவார்கள். இதனால் பெரும் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்காக இந்த ஆலோசனைகள்:

                         சந்தை எப்பொழுது ஏறும், எப்பொழுது சரியும் என்பதை, சாதாரணமாக முதலீட்டாளர்கள் அறிவது கடினம்.மென்மேலும் ஏறும் என்று நினைக்கும்பொழுது சரியத் தொடங்கும், சரிந்து கொண்டே போகும் என்று கணிக்கும்பொழுது திருப்பம் ஏற்பட்டு ஏறத்தொடங்கும்.

                       நீங்கள் ஒரு பங்கின் விலை ஏறும் என நினைத்து ரூ.200.00 என ஆயிரம் பங்குகளை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் வாங்கியபின் விலை சரிந்து ரூ. 150.00 ஆகிவிடுகிறது. நீங்கள் அதை நட்டத்துக்கு விற்றுவிடுகிறீர்கள். மறு நாளே அது 240.00க்கு ஏறிவிடுகிறது.உங்களுக்கு என்ன செய்வதென்றே புரிவதில்லை. இது உங்களுடையது மட்டுமல்ல, பலருக்கும் இதே அனுபவம்தான். இதற்கு என்ன செய்வது?
  1. நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகை முழுவதையும் ஒரே சமயத்தில், ஒரே பங்கில் போடாதீர்கள். (அதாவது, ரூ.200 என்ற விலையில் 200 பங்குகளை வாங்குகிறீர்கள்.)
  2. நீங்கள் வாங்கிய பங்கின் விலை இறங்கும்பொழுது மீண்டும் ( ரூ.150.00 என்ற விலையில் ) நூறு அல்லது இரு நூறு பங்குகளை வாங்குங்கள்.
  3. இவ்வாறு பங்குகளின் விலை சரியும்பொழுது வாங்குவதை, Averaging என்பர். விலை ஏறும்பொழுதும், உங்களிடம் உள்ள பங்குகளை மொத்தமாக விற்காதீர்கள். பாதியை மட்டுமே விற்பனை செய்யுங்கள். விலை மேலும் ஏறினால், மீதத்தை விற்கலாம். குறைந்தால், இன்னும் கொஞ்சம் பங்குகள் வாங்குங்கள்.
  4. பங்காதாயம் தரும் நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யவும். பங்குகளின் விலை இறங்கியிருக்கும் பொழுது, குறைந்தபட்சம் அதுவாவது கிடைக்கும். நட்டமான நிறுவனங்களின் பங்குகளை வாங்கவே வாங்காதீர்கள்.
  5. நிறையப் பணம் வைத்திருக்கிறீர்கள், துணிகரமான முதலீடுகளில் இறங்க விரும்புகிறீர்கள் என்றால் மட்டுமே Z வகை பங்குகளில் முதலீடு செய்யுங்கள். இல்லையெனில், நல்ல, தரமான நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யவும்
  6. பங்குச் சந்தை மிகுந்த மாற்றங்களுக்கு உட்படும்பொழுது, மிகவும் விழிப்புடன், சந்தை நிலவரத்தைக் கண்காணிப்பது முக்கியம்.
  7. கரடிச் சந்தை நிலவும் தருணமே முதலீடு செய்யச் சிறந்த தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  8. உயரே செல்லும் ராட்டினச்சக்கரம் (Giant wheel), கீழிறங்குவதும், கீழே உள்ள சக்கரம் மேலெழும்புவதும் இயற்கை. பங்குச் சந்தையும் அப்படித்தான். எனவே, கரடிச்சந்தை நிலவரத்தின் பொழுது, பீதியடைந்து, எல்லோரும் விற்கிறார்களே என்று நீங்களும் விற்க வேண்டாம். பொறுத்திருங்கள். முடிந்தால், மேலும் மேலும் நல்ல பங்குகளில் முதலீடு செய்யுங்கள்.

                                 குறிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டிய விதி ஒன்று உண்டு. அது, உங்கள் அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது என்பதுதான். பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபடுகையில், ஒரே பங்கிலோ, ஒரே விதமான Industry இலோ உங்கள் பணத்தை முடக்காமல் பல விதப்பங்குகளிலும் பகிர்ந்து போடுவது, உங்கள் முதலீட்டை சந்தையின் ஏற்றத் தாழ்வு காரணமாக இழக்கும் அபாயத்தைக் குறைக்க வல்லது...