Thursday, March 1, 2012

ஓ.என்.ஜி.சி., பங்கு வெளியீடு குறைந்தபட்ச விலை ரூ.290



புதுடில்லி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஏல முறையிலான பங்கு வெளியீடு இன்று நடைபெறுகிறது. ஒரு பங்கின் அடிப்படை விலை 290 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 9.15 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை பங்குகள் ஏலம் விடப்படும்.
பங்குச் சந்தையின் சாதகமற்ற சூழல் காரணமாக, ஓ.என்.ஜி.சி.ன் பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடம் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்தது. இதையடுத்து, சென்ற ஆண்டு இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.இதையடுத்து, பங்குச்சந்தையில், நிறுவனர்கள் ஏலம் மூலம் பங்கு விற்பனை மேற்கொள்ளும் புதிய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதன் முறையாக, ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ஏல முறையில் பங்கு விற்பனை மேற்கொள்கிறது.
இந்த ஏலம் வாயிலாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 42.77 கோடி பங்குகளை விற்பனை செய்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஏலத்தில், சில்லரை முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். அவர்கள் குறிப்பிடும் விலையில், தேவைப்படும் பங்குகள் இருக்கும் பட்சத்தில், அந்த தொகைக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.