Tuesday, February 28, 2012

சென்செக்ஸ்' 478 புள்ளிகள் வீழ்ச்சி



மும்பை நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று பெரும் சரிவைச் சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு காணப்படாததால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது.
இந்நிலையில், சர்வதேச நிலவரங்கள், உத்தரபிரதேச மாநில தேர்தல் போன்றவற்றால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இது தவிர, லாப நோக்கம் கருதி அதிக எண்ணிக்கையில், பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் விலை மிகவும் குறைந்து போனது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை இருந்தது. அதேசமயம், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், வங்கி, பொறியியல், உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 477.82 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,445.75 புள்ளிகளில் நிலைபெற்றது. 
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,975.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,381.64 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.டி.சி., மற்றும் சன்பார்மா ஆகிய இரு நிறுவனப் பங்குகளை தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 148.10 புள்ளிகள் சரிவடைந்து, 5,281.20 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,449.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,268.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.